செய்திக்குறிப்புகள்:
- கூடுதலாக திருநெல்வேலி - செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்.
- குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கொரோனா நோய்ப்பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பல்வேறு ரயில்கள் தற்போது மீண்டும் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் காலையில் ஒரு முறையும், மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மாலையில் திருநெல்வேலிக்கு ஒருமுறையும் மட்டும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட உத்தரவுப்படி திருநெல்வேலி - செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் சிறப்பு பயணிகள் விரைவு ரயில் இன்று முதல் இயங்க உள்ளது. இந்த சிறப்பு ரயிலானது தினமும் செங்கோட்டையில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் எனவும், மறு மார்க்கமாக மதியம் 2.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விரைவு ரயிலானது திருநெல்வேலி டவுண், பேட்டை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.