திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பெருகி வரும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் திரு.கண்ணன் அவர்கள் உத்தரவின் பேரில், பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் தினமும் ஆட்டோக்கள் மூலம் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கபசுர குடிநீர் வழங்கும் வாகனங்களை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் திரு.மகேஷ்குமார் அவர்கள் கொடியசைத்தும், மாநகர நல அலுவலர் மருத்துவர் திருமதி.சரோஜா அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கியும் துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.