கடந்த 2012-ம் ஆண்டு திருநெல்வேலி-தென்காசி இடையேயான ரயில் போக்குவரத்து வழித்தடம் 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அகலப்பாதையாக தரம் உயர்த்தப்பட்டாலும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான இருப்பு பாதைகள் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து முடிந்தது. மார்ச் 9 ஆம் தேதி திருநெல்வேலி தென்காசி ரயில்வே வழித்தடத்தில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பிலிருந்து காலை 9.20 மணிக்கு ஆய்வு ரயில் புறப்பட்டு தென்காசியை 10.15 மணிக்கு வந்தடைந்தது. மீண்டும் தென்காசியில் இருந்து 10.45 மணிக்கு இயக்கப்பட்ட ரயில் வழக்கமான வேகத்தில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. நடந்து முடிந்த தெற்கு ரயில்வே சோதனை முடிவில் இந்த வழித்தடத்தில் ஒரு மாதத்தில் ரயில் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே வாரந்தோறும் இயக்கப்படும் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.