தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாத்தூர் தொட்டிப்பாலத்தை சுற்றி பார்க்க எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இயற்கை அழகு சூழ்ந்த பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்த பாலத்தின் மீது நின்றபடி பரளியாற்றின் அழகையும், இரண்டு கரைகளிலும் நெடிதுயர்ந்து வளர்ந்து காணப்பட்ட மரங்களின் அழகையும் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், அருகிலுள்ள திற்பரப்பு அருவிக்கும் சென்று குளித்து, படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.