தமிழக அரசு கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நேற்று முதல் அமலுக்கு வந்த இந்த கட்டுப்பாடுகள் திருநெல்வேலி மாநகரில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனால் காலையிலேயே மக்கள் அனைவரும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க திருநெல்வேலி டவுன் ரத வீதி காய்கறி கடைகள் - மளிகை கடைகள், நயினார்குளம் சந்தை, சாலையோர காய்கறி கடைகள், பாளையங்கோட்டை மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் கூட்டமாக குவியத் துவங்கினார்கள். அதற்கு ஏற்றபடி கடைகள் அனைத்தும் நேற்று காலை ஆறு மணி அளவிலேயே திறக்கப்பட்டன. மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தி, கண்காணிக்க மாநகர காவல் துறையினரும் சிறப்பு பணியாற்றினார்கள். இதனால் காலையில் மாநகரின் கடை வீதிகள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. அதே நேரம் மதியம் 12.00 மணிக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் காலை பரபரப்பாக காணப்பட்ட மாநகரம், பகல் 1.00 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தமிழக அரசின் அறிவுறுத்தல் படி அனைத்து அரசு அலுவலகங்களும் ஐம்பது சதவீத ஊழியர்களை கொண்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.