தமிழக அரசு கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நேற்று முதல் அமலுக்கு வந்த இந்த கட்டுப்பாடுகள் திருநெல்வேலி மாநகரில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனால் காலையிலேயே மக்கள் அனைவரும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க திருநெல்வேலி டவுன் ரத வீதி காய்கறி கடைகள் - மளிகை கடைகள், நயினார்குளம் சந்தை, சாலையோர காய்கறி கடைகள், பாளையங்கோட்டை மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் கூட்டமாக குவியத் துவங்கினார்கள். அதற்கு ஏற்றபடி கடைகள் அனைத்தும் நேற்று காலை ஆறு மணி அளவிலேயே திறக்கப்பட்டன. மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தி, கண்காணிக்க மாநகர காவல் துறையினரும் சிறப்பு பணியாற்றினார்கள். இதனால் காலையில் மாநகரின் கடை வீதிகள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. அதே நேரம் மதியம் 12.00 மணிக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் காலை பரபரப்பாக காணப்பட்ட மாநகரம், பகல் 1.00 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தமிழக அரசின் அறிவுறுத்தல் படி அனைத்து அரசு அலுவலகங்களும் ஐம்பது சதவீத ஊழியர்களை கொண்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.