இந்திய எல்லைப்பகுதியான காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரோன்கள் மூலமாக இந்திய விமானப்படை தளம் மற்றும் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து மத்திய அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் உள்ள ராணுவ முகாம்கள், அணு உலைகள், ஆராய்ச்சி மையங்கள், ஆயுத தொழிற்ச்சாலைகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலியிலும் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள கடற்படைக்கு சொந்தமான இடம் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இடங்களில் குறிப்பாக திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் படம் பிடிக்க பயன்படுத்தப்படும் டிரோன்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் அனுமதி பெற்ற பின்னர் தான் பறக்க விட வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.