கொரோனா நோய் பரவலை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதியில் பாளையங்கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும், வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை சானிடைசர் மற்றும் சோப்புகள் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்கள் அனைவரும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.