கொரோனா நோய் பரவலை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதியில் பாளையங்கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும், வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை சானிடைசர் மற்றும் சோப்புகள் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்கள் அனைவரும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.