திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த திரு.கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த திரு.விஷ்ணுசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் திருநெல்வேலி புதிய மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார் . திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையராக கடந்த 13/06/21 பதவியேற்றுக் கொண்ட திரு.விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார்.
புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தான் 2015- ஆண்டு ஐ.ஏ.எஸ் முடித்து தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளதாகவும், வருவாய் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ள தனக்கு மாநகராட்சி நிர்வாகம் என்பது புதிதாகும் என்று கூறினார். மேலும் திருநெல்வேலி மாநகராட்சியைப் பொறுத்தவரை பாதாளச்சாக்கடை திட்டம் , ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் காலதமதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழுதடைந்த சாலைகள், குடிதண்ணீர் பிரச்சனை என மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், மாவட்டத்தின் முக்கிய நதியான தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.