- கூடுதலாக திருநெல்வேலி - செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்.
- குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கொரோனா நோய்ப்பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பல்வேறு ரயில்கள் தற்போது மீண்டும் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் காலையில் ஒரு முறையும், மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மாலையில் திருநெல்வேலிக்கு ஒருமுறையும் மட்டும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட உத்தரவுப்படி திருநெல்வேலி - செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் சிறப்பு பயணிகள் விரைவு ரயில் இன்று முதல் இயங்க உள்ளது. இந்த சிறப்பு ரயிலானது தினமும் செங்கோட்டையில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் எனவும், மறு மார்க்கமாக மதியம் 2.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விரைவு ரயிலானது திருநெல்வேலி டவுண், பேட்டை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.