கொரோனா பெருந்தொற்று பரவலாக பெருகி வந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் நிறைய ரத்து செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக பாசஞ்சர் ரெயில் அடியோடு நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், ஒரு சில பாசஞ்சர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பயணிகள் வருகையும் குறைந்து விட்டதால் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், நிறுத்தப்பட்டிருந்த பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பயணிகள் ரயில் நிரம்பியவாறு செல்வதையும், காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் காண முடிகிறது. திருநெல்வேலியில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் முக்கிய நகரங்கள் செல்லவும், அங்கிருந்து திருநெல்வேலி திரும்பி வரவும் பெரும்பாலோனோர் ரயில்களில் முன்பதிவு செய்வதால் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை நூறுக்கு மேல் மேல் தாண்டி உள்ளது.
நேற்று திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்வதற்காக ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.