நெல்லை மாநகர காவல்துறைக்கு புதிய ஆணையாளராக திரு.செந்தாமரைக்கண்ணன் அவர்களை நியமித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அமலாக்கப்பிரிவில் ஐ.ஜியாக பணியில் இருந்த திரு.செந்தாமரைக்கண்ணன் அவர்கள் அந்த பணியில் இருந்து விடுபட்டு, நெல்லை மாநகர புதிய ஆணையாளராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக பதவியேற்றுக்கொண்ட திரு.செந்தாமரை கண்ணன் அவர்கள், கடந்த 1991-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் நெல்லை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், சென்னையில் காவல்துறை துணை ஆணையாளராகவும், சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த சிறப்பு படை அதிகாரியாகவும், விழுப்புரம், திருச்சி, டி.ஐ.ஜி.யாகவும், சிறப்பு காவல் படை ஐ.ஜி.யாகவும், சென்னை அமலாக்கப்பிரிவில் ஐ.ஜியாகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பாளையங்கோட்டை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட பின்னர் திரு. செந்தாமரைக்கண்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாநகரத்தில் ரவுடியிசத்தை ஒடுக்கவும் , கந்துவட்டி பிரச்சனைகளை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் அவர் மாநகரில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தேவையான இடங்களில் கூடுதல் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.