திருநெல்வேலி மாவட்டம்., சேரன்மாதேவியில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில். மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஒரு கல்வெட்டு இருப்பதாக நெல்லை வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ராமசாமி கோவிலில் உள்ள வட்டெழுத்து கல்வெட்டு சோழர் காலத்தில் வெட்டப்பட்டது என்பதும், அந்த கல்வெட்டில் உள்ள வாசகத்தின் விவரங்களும் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகங்கள் கோவில் கருவறை அதிட்டானத்தில் உருளை வடிவ கல்லில் எழுதப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் மன்னனின் மகன் ராஜேந்திர சோழன் (1012-1044) ஆட்சி காலத்தில் அதாவது 1015-ம் ஆண்டில் வெட்டப்பட்டது. இதன் வாயிலாக இந்த கல்வெட்டு 1,100 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது.
மேலும் அந்த கல்வெட்டில் அந்த ஊரின் பெயர் "முள்ளிநாட்டு பிரம்ம தேயமான சோழ நிகரிலி சதுர்வேதி மங்கலம்" என்றும், இறைவனை "நிகரிலி சோழ விண்ணகர உடையார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்கு நந்தா விளக்கு ஒன்று தானமாக கொடுக்கப்பட்டு, விளக்கு எரிக்க நெய் தானம் வழங்கப்பட்ட தகவலையும், அந்த விளக்கில் நெய் அளவுக்கு அதிகமாக ஊற்றாமல் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வெட்டு கூடுதல் ஆய்வுக்காக மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.