திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 07/02/2022 அன்று மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சுவாமி குமரவிடங்கர் மற்றும் தெய்வானை அம்மை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த விழாவின் ஏழாம் நாளான 13/02/2022 அன்று சண்முகப்பெருமான் தங்கச்சப்பரத்தில் - சிவப்பு சாத்தி கோலத்திலும், எட்டாம் திருநாளான 14/02/2022 அன்று அதிகாலையில் சண்முகப்பெருமான் வெள்ளிச்சப்பரத்தில் - வெள்ளை சாத்தி கோலத்திலும், பகலில் சண்முகப்பெருமான் பச்சைக்கடைசல் சப்பரத்தில் - பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 16/02/2022 நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை விநாயகர், வள்ளி-தெய்வானை உடனுறை குமரவிடங்கர், தெய்வானை அம்மை கேடயத்தில் திருத்தேர்களுக்கு எழுந்தருள, முதலில் விநாயகர் தேரும், இரண்டாவதாக குமரவிடங்கர் தேரும், இறுதியாக தெய்வானை அம்மை தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்த விழாவில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.