திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 07/02/2022 அன்று மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சுவாமி குமரவிடங்கர் மற்றும் தெய்வானை அம்மை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த விழாவின் ஏழாம் நாளான 13/02/2022 அன்று சண்முகப்பெருமான் தங்கச்சப்பரத்தில் - சிவப்பு சாத்தி கோலத்திலும், எட்டாம் திருநாளான 14/02/2022 அன்று அதிகாலையில் சண்முகப்பெருமான் வெள்ளிச்சப்பரத்தில் - வெள்ளை சாத்தி கோலத்திலும், பகலில் சண்முகப்பெருமான் பச்சைக்கடைசல் சப்பரத்தில் - பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 16/02/2022 நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை விநாயகர், வள்ளி-தெய்வானை உடனுறை குமரவிடங்கர், தெய்வானை அம்மை கேடயத்தில் திருத்தேர்களுக்கு எழுந்தருள, முதலில் விநாயகர் தேரும், இரண்டாவதாக குமரவிடங்கர் தேரும், இறுதியாக தெய்வானை அம்மை தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்த விழாவில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.