தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது., வ.உ.சி. துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளமும், 25 டன் எடையும் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றாலை இறகுகள் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக நேற்று கொண்டு வரப்பட்டது. துறைமுகத்தில் உள்ள அதிநவீன பளுதூக்கிகள் மூலம் இந்த காற்றாலை இறகுகள் கப்பலில் ஏற்றப்பட்டன. 142.8 மீட்டர் நீளம் கொண்ட எம்.ஒய்.எஸ்.டெஸ்நேவா என்ற கப்பலில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட 6 காற்றாலை இறகுகளும், 77.10 மீட்டர் நீளம் கொண்ட12 இறகுகளும் ஏற்றப்பட்டன. தொடர்ந்து கப்பல் ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றது.
இதனால் காற்றாலை இறகுகளை சிறப்பாக, பாதுகாப்பான முறையில் கையாண்டு சாதனை புரிய உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்கள், சரக்கு கையாளும் முகவர்கள், போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியாளர்கள், துறைமுக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வருங்காலங்களிலும் காற்றாலை ஏற்றுமதியில் மேம்பட்ட செயல்திறனை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.