பாளையங்கோட்டையில் 8-வது நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தி உள்ளனர். அதன்பிறகு பாளையக்காரர்களும், பின்பு ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி உள்ளனர். பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோட்டை பழங்கால ஆட்சியின் அடையாளமாக மிஞ்சி நிற்கிறது. இந்த கோட்டை மீது இயங்கி வந்த மேடை காவல் நிலையமும் மூடப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதால், தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் இதன் மீது தனி கவனம் செலுத்தி, கோட்டையின் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு இந்த தொன்மையை, அடையாளத்தை பாதுகாத்து வழங்கிட சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வந்த நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் கோட்டைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், "நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் பாளையங்கோட்டை வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் விதமாக கோட்டை புதுப்பிக்கப்படும்" என்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் கோட்டையை நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், தற்போது அங்கு பராமரிப்பு பணிகள் துவங்கி உள்ளது.