கொரோனா இரண்டாம் அலை தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில், திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகப் பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் பத்தாயிரம் நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா நோய்க்கான மருந்துகள் எதுவும் சரிவர கண்டுபிடிக்கப்படாத நிலையில், கபசுரக் குடிநீர் உட்கொள்வதால் நோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாநகரில் உள்ள பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிமூலம் தினமும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் தன்னார்வலர்களுடன் இணைந்து நேற்று பத்தாயிரம் நபர்களுக்கு கபசுரக் குடிநீர் காய்ச்சி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பெயரில் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.