திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. நேற்று பகலில் தூறலுடன் ஆரம்பித்த மழை, நேற்று இரவு வரை தொடர்ந்தது. மாநகர சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் கோடை கால வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் பரவலாக மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.