திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு நுண்நிதி கடன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களின் அவசர காரணங்களுக்காக பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கிய பொது மக்களிடம், அதற்குரிய மாதாந்திர தவணைத்தொகை மற்றும் வட்டித்தொகை வசூலிப்பத்தில் அதிக கெடுபிடியாக நடந்து கொள்ளும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் கொரோனா ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு வங்கிகள், நிதி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் எந்தவித கட்டாய வசூலிலும் ஈடுபடக்கூடாது. கடன் வாங்கியவர்களின் வீடுகளுக்கு சென்று கடனை கேட்டு வற்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இனிவரும் காலங்களில் இதுதொடர்பாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நிதி நிறுவனங்கள், வங்கிகள் பொதுமக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை 0462-2500302 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியினை cms.nbfcochennai@rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், https://cms.rbi.org.in என்ற இணையதளத்திலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரியப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் கூறியுள்ளார்.