திருநெல்வேலி மாநகரில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், அக்னி நட்சத்திரத்தின் தொடக்க நாளான நேற்று மாநகரில் வெயில் சதமடித்தது. பகலில் அவ்வப்போது மேகங்கள் சூழ்ந்து வந்தாலும், மழை எதுவும் பொழியவில்லை. நேற்று தொடங்கிய அக்னி நட்சத்திர காலம் தொடர்ந்து வரப்போகும் 24 நாட்கள் வரை நீடிக்க உள்ள நிலையில், இந்த வெப்பநிலை மேலும் 107'C வரை நீடிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் மாநகரில் உள்ள கடைகளில் பதநீர், நுங்கு, இளநீர், சர்பத், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வெயிலின் தாக்கத்தால் மாநகரில் உள்ள சாலைகளில் அவ்வப்போது கானல் நீர் தென்பட்டன. ஏற்கனவே கொரோனா நோய் பரவல் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், நேற்று அக்னி வெயிலும் தொடங்கியதால் பகலில் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.