தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாதத்திற்கு ஒருமுறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் ஜனவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரத்து 951 ரூபாய் ரொக்கப்பணமும், 940 கிராம் தங்கமும், 12 ஆயிரத்து 184 கிராம் வெள்ளியும், 87 வெளிநாட்டு நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், தூத்துக்குடி உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, அறநிலையத்துறை ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, இசக்கிசெல்வம், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி ஓதுவார், மோகன், சிவகாசி பதினென்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.